நெல்லிக்காய் சாதம்
தேவையான பொருட்கள் சாதம் - 1 கோப்பை பெரிய நெல்லிக்காய் - 6 வர மிளகாய் - 5 கறிவேப்பிலை - 2 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 2 சிட்டிகை நெய் - 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. நெல்லிக்காயை பொடியாகத் துருவி, கொட்டையை எடுத்து விடவும். 2. வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும். 4. அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, சிறிது நேரம் (2 அல்லது 3 நிமிடம்) வதக்கியதும், நெல்லிக்காய் வாசம் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும். 5. அடுப்பில் இருந்து இறக்கிய நெல்லிக்காய் கலவையுடன் ஆற வைத்த சாதம் சேர்த்து, சாதம் குலையாமல் நன்கு கிளறவும். 6. தனியே சிறிது நெய்யில் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கிளறிய சாதத்துடன் சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும். குறிப்பு 1. நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி சுவையாக இருக்கும். 2. நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாகத் (இஞ்சி துருவலில்) துருவிக் கொள்ளவும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும். 3. தேவைப்பட்டால் பொட்டுக்கடலையுடன், முந்திரி மற்றும் நிலக்கடலையும் நெய்யில் வறுத்துச் சேர்த்துக் கொள்ளலாம். 4. தாளிக்கும் போது வர மிளகாய்க்குப் பதில் பச்சை மிளகாயும் சேர்த்துச் செய்யலாம். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |