புடலங்காய் பொரியல்
தேவையான பொருட்கள் புடலங்காய் - 1 (200 கிராம்) பாசிப் பருப்பு - 25 கிராம் பெரிய வெங்காயம் - 1 கடுகு - 1/4 தேக்கரண்டி சீரகம் - 1/4 தேக்கரண்டி வரமிளகாய் - 3 பெருங்காயம் - 1 சிட்டிகை மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. புடலங்காயை அரை இஞ்ச் அளவிற்கு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பாசிப் பருப்பை லேசாக வறுத்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். 3. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து, அதனுடன் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். 5. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை நன்கு வதக்கவும். 6. அதனுடன் நறுக்கிய புடலங்காய், உப்பு சேர்த்து வேக வதக்கவும். 7. புடலங்காய் வெந்ததும், பாதி வேகவைத்த பாசிப் பருப்பை சேர்த்து கிளறவும். 8. இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். குறிப்பு 1. பாசிப் பருப்பு அரை வேக்காடாக குழையாமல் இருந்தால் தான் பொரியல் உதிரி உதிரியாக இருக்கும். இல்லையெனில் கூட்டு போல் ஒன்றாக ஒட்டிக் கொள்ளும். 2. பாசிப் பருப்பு சேர்க்காமல் செய்தால் அதற்கு பதிலாக இறக்கும் போது ஒரு தேக்கரண்டி கெட்டித் தயிர் சேர்த்து செய்தால் சுவை வேறு மாதிரி இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |